தமிழ் எழுத்துலகில் ஆவி எழுத்தாளர்களின் நடமாட்டம்

இராகவன் கருப்பையா – நம் நாட்டில் உள்ள தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிட்ட ஒரு சாரார் அசல் எழுத்தாளர்களே அல்ல! மாராக, தங்களுக்கு அறிமுகமான மற்றவர்களை எழுதச் சொல்லி, தங்களுடைய பெயர்களை அந்தப் படைப்புகளின் மீது பதிவிட்டு பிரசுரத்திற்கு அனுப்புவதாகத் தெரிகிறது.

அப்படி பிரசுரமாகும் படைப்பின் உண்மையான எழுத்தாளர் யார் என்று தெரியாத நிலையில், அவரை நாம் ஆவி எழுத்தாளர் என்கிறோம்.

அதோடு தற்போது கணிணி வழி உருவாக்கம் கண்டுள்ள செயற்கை நுண்ணறிவு தளமும் இந்த ஆவி எழுத்தாளராக உருவாக்கம் கண்டு வருகிறது.

இந்நிலையில், இத்தகைய ஒரு போக்கு தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு எவ்வகையிலும் உதவாது என்பது மட்டுமின்றி நமக்கு வேதனையளிக்கக் கூடிய அவமானகரமான ஒரு செயலாகவும் உள்ளது.

ஒருவர் எழுத்தாளராக பரிணமிக்க ஆசைப்படுவதில் தவறில்லை. அதற்கான  முயற்சிகளையும் பயிற்சிகளையும் முறையாக மேற்கொண்டால் அவர் தனது இலக்கை அடைவதில் தடைகள் இருக்காது.

ஆனால் சிறந்த எழுத்தாளராகத் தன்னைக் காட்டிக் கொள்வதற்கு குறுக்கு வழிகளைக் கையாள்வது அறிவிலித்தனமான ஒரு முன்மாதிரியாகும்.

பள்ளித் தேர்வுகளின் போது மாணவன் ஒருவன் ஆசிரியருக்குத் தெரியாமல் காப்பியடித்தால் உயரிய மதிப்பெண்களை பெற வாய்ப்பிருக்கிறது. ஆனால் அத்தகைய அடாவடிச் செயலினால் யாருக்கு என்ன பயன்?

அதே போல கதை, கட்டுரை, கவிதை, போன்ற எழுத்துப் படிவங்களை மற்றவர்களிடம் இருந்து வாங்கிக் கொண்டு தாங்கள் எழுதியதாகக் காட்டிக் கொள்ளும் வகையில் தங்களுடையப் பெயர்களில் அவற்றை பிரசுரங்களுக்கு அனுப்புபவர்களை ‘போலி எழுத்தாளர்கள்’ என்று முத்திரைக் குத்துவதை விட வேறு என்னவென்ற சொல்வது?

தினசரிகளுக்கும் வார, மாத இதழ்களுக்கும் அனுப்பப்படும் இத்தகைய ‘போலி படைப்புகளுக்கு’ சில வேளைகளில் பரிசுகள் கிடைப்பதாகவும் சொல்லப்படுகிறது. பரிசளிப்பவர்களை ஏமாற்றி வீண் புகழை அடைவதில் என்னதான் பயன் என்றுத் தெரியவில்லை.

தேசிய நில, நிதி கூட்டுறவுச் சங்கம், தமிழ் எழுத்தாளர் சங்கங்கள் மற்றும் வானொலி நிலையங்கள் போன்ற அமைப்புகள் ஏற்பாடு செய்யும் இலக்கியப் போட்டிகளுக்கும் கூட இது போன்ற படைப்புகளை கொஞ்சமும் சங்கோஜமின்றி அனுப்பும் அவர்களில் சிலர் வெற்றியும் பெறுகின்றனர் என்ற தகவலும் உண்டு.

அத்தகையத் தருணங்களில் அவர்களுடைய மனசாட்சி எப்படி இருக்கும் என்பது அவர்களுக்குத்தான் தெரியும். ஏனெனில் அசலான படைப்புகளுக்கு விருதுகள் பெரும் போது கிடைக்கும் ஆனந்தத்திற்கு ஈடேதும்  உண்டா? அது ஒரு சுதந்திர சுகம் அல்லவா!

வெறுமையான போலி வெற்றிகளை அவர்கள் கொண்டாடுவதிலோ, கழுத்தில் மாலைகளை வாங்கிக் கொண்டு தம்பட்டம் அடித்துக்கொள்வதிலோ அர்த்தமே இல்லை.

‘பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்,’ என்பதற்கு ஏற்ப இத்தகையோரின் சாயம் கண்டிப்பாக ஒரு நாள் வெளுக்கும். அதன் பிறகு அவர்களுடைய படைப்புகளை – அவை அசலாக இருந்தாலும் கூட – யாரும் நம்பமாட்டார்கள்.

ஒரு படைப்பை அசலாக உருவாக்கி திருத்துவதற்காக அதனை மற்றவர்களிடம் கொடுப்பதில் எவ்விதத் தவறும் இல்லை. பலருக்கு அது இயல்பான ஒன்றுதான்.

ஆனால் முழுவதுமாக மற்றொருவரை எழுதச் சொல்லி, சில வேளைகளில் அதற்கு கட்டணமும் செலுத்தி, அதன் மீது பந்தாவாகத் தனது பெயரை பதிவு செய்து பிரசுரங்களுக்கோ போட்டிகளுக்கோ அனுப்புவது கேவலமான ஒரு செயலாகும்.

இது போன்ற ‘டம்மி’ எழுத்தாளர்களுக்கு இலக்கிய விடியலே இருக்காது என்பதை காலம் உணர்த்தும். எனவே ஒவ்வொரு எழுத்தாளனும் நிஜமாக, அசலாக தனது படைப்பைப் புனைய வேண்டியது அவசியமாகும். அதுவே நாம் கட்டி காக்கும் தமிழ் இலக்கிய பணிக்கு நாம் செலுத்தும் மரியாதையாகும்.